Print this page

சுற்றுலா சென்ற ஜோடிக்கு ஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்!

February 27, 2022

நுவரெலியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தம்பதியர் இன்று (27) காலை நுவரெலியா களுகேலே பகுதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஏசியன் மிரருக்கு தெரிவித்தார்.

குருநாகல் கொகரெல்ல நெகன்ன பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.ஏ.கே ஹேரத் (59) மற்றும் எம்.ஏ.எம்.என் மொலகொட (58) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் கொகரெல்ல பிரதேசத்தில் இருந்து நுவரெலியா களுகேலே பிரதேசத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு குடும்ப உறுப்பினர்களுடன் வந்தடைந்த தம்பதியினர் உறங்கச் சென்றுள்ளனர்.

தம்பதியினர் இன்று (27) காலை எழுந்திருக்கவில்லை என குடும்பத்தினர் தாம் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பார்பிக்யூ அடுப்பிலிருந்து வெளியேறிய விஷ புகை காரணமாக இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி என தெரியவந்துள்ளது.

நுவரெலியா நீதவானின் மரண விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.