Print this page

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

February 28, 2022

இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து அவர்கள் விசைப்படகைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இது குறித்துப் பல முறை அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை அரசுடைமையாக்கப்பட்டு அவற்றை இலங்கை அரசு ஏலம் விட்டு வருகிறது.

நேற்று முன் தினம் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வ்ந்ததாக கூறி தங்கச்சி மடத்தை சேர்ந்த ரமேஷ் என்பவின் விசைப்படகைப் பறிமுதல் செய்தனர்

அந்த படகில் இருந்த ரமேஷ் (40),ரோடிக்(18), அஜித்(19), கொலம்பஸ்(52), இமான்(22), லின்சன்(23), பவுத்தி(19), இஸ்ரேல் (20) ஆகிய 8 மீனவர்களைக் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 26 நாட்களில் தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 80 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Last modified on Monday, 28 February 2022 02:32