Print this page

என்னை வீழ்த்த முடியாது நான் வளர்வேன் - ஜீவன்

February 28, 2022

இத்தனை வருடங்களாக சிலர் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் முடித்துக் காண்பித்துள்ளோம் என்று தெரிவித்த என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதே நேரம் இன்று பலர் தரமற்ற விமர்சனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் அதனால் நான் வளர்வேனே தவிர ஒரு போதும் எவரும் என்னை வீழத்த முடியாது என தெரிவித்தார்.

அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் குறுக்கு வீதியை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“மலையகத்தில் இன்று பலர் பல்வேறு அர்த்தமற்ற விமர்சனங்களை செய்து வருகிறார்கள். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக செய்யப்படும் விமர்சனங்களுக்கு என்னால் பதிலளித்துக்கொண்டு இருக்க முடியாது.

ஆரம்பத்தில் ஒரு கூட்டம் கூறியது எமது மக்களுக்கு கோதுமை மா தேவையில்லை என்றும் கோதுமை மா வினை வைத்து அரசியல் செய்கின்றோம் என்றும் கூறினார்கள். அதனை தொடர்ந்து விலையினை குறைத்துக் கொடுத்தவுடன் அது தாமதம் என்றார்கள் ஆகவே தரமற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.

30 வருட போரினை கடந்து நாம் திரும்பி மீண்டு வந்துள்ளோம். ஆகவே இந்த கொரோனா பாதிப்பில் இருந்தும் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறான தொற்றுக்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் போது மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

நுவரெலியாவைப் பொறுத்த வரையில் மக்கள் பொறுயாகத்தான் இருந்தார்கள் அதற்கு நான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆகவே ஏனைய மாவட்டங்களை போன்று வீதி அபிவிருத்திகள் நடந்தால் நாளை பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். கடந்த காலங்களில் இந்த வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலையே காணப்பட்டன.

எத்தனையோ கர்பிணித்தாய்மார்கள் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள். ஆகவே தான் இந்த வீதியினை அபிவிருத்தி செய்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் மேலும் பல்வேறு அபிவிருத்திகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.