Print this page

டோனியர் விமானத்தை வழங்க தயாராகும் இந்தியா

டோனியர் ரக கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை இலங்கைக்கு வழங்க இந்தியா தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாகவே டோனியர் விமானம் ஒன்றை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வரும் நிலையில், பிராந்திய நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தி வரும் இந்தியா அண்மைகாலமாக இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றது.

இந்த நிலையில், இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை கட்டியெழுப்புவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா ஒரு டோர்னியர் உளவு விமானத்தை மாற்றும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ பயிற்சி அண்மையில் முன்னெடுக்கப்பட்டதுடன், இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் ராஜேந்திர சிங், இலங்கையின் கடலோர காவல் படைத் தளபதி றியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.