Print this page

'புதிய ஜனாதிபதியே பதவியேற்பார்'

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக தோல்வியடைவாரென அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி புதிய ஜனாதிபதியொருவர் பொறுப்பேற்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் நிச்சயமாக 2020 ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகின்றது.

இது குறித்து நீதிமன்ற ஆலோசனையை நாடுவது ஜனாதிபதியின் உரிமையாக கருதப்படுவதுடன் அது நாட்டின் எதிர்காலத்துக்கு ஏற்புடையதாகவும் அமையும்.

எனினும் ஜனாதிபதியின் பதவிகாலம் குறித்து அவர் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

அத்தகைய அபிப்பிராயத்தை பெறுவதற்கு உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னதாக புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி தயாசேகர கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.