Print this page

இலங்கை தமிழர்களுக்கு 10,000 ரூபா நன்கொடை வழங்கிய யாசகர்!

இலங்கைத் தமிழர்களுக்கு தூத்துக்குடி யாசகர் இந்திய ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறை சேர்ந்தவர் பாண்டி (65). யாசகரான இவர் கொரோனா நிவாரண உதவியாக 10 ஆயிரம் வீதம் பல முறை நிதி உதவி வழங்கியுள்ளார். இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் விசாகனிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பணியாற்றினேன். அப்போது அங்கு பல சமூக சேவைகள் செய்துள்ளேன்.

2 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டுள்ளேன். இச்சூழ்நிலையில் மீண்டும் தமிழகம் வந்து யாசகம் செய்து, அதில் கிடைத்த பணத்தை 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கி உள்ளேன். மேலும் கொரோனா நிதி உதவியை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட கலெக்டர்களிடம் வழங்கி உள்ளேன். தற்போது திண்டுக்கல் கலெக்டர் விசாகனிடம் இலங்கை தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளேன்’’ என்றார்.