Print this page

கிட்னி வியாபாரத்தில் ஈடுபடும் இரண்டு வைத்தியர்கள்!

சிறுநீரக மோசடி தொடர்பில் இரண்டு வைத்தியர்களுக்கு எதிராக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த இரு வைத்தியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க குழுவினால் ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் செயலாளர் டொக்டர் ஆனந்த ஹபுகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹெவ்லொக் வீதியில் வசிக்கும் கலாநிதி ருவன் எம். ஜயதுங்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்கள் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண் வைத்தியசாலையில் இந்த வைத்தியர்கள் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. சிறுநீரக மோசடி தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2013ஆம் ஆண்டு சிறுநீரக மோசடி தொடர்பாக இந்தியப் பிரஜை ஒருவர் சிஐடியால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் இரண்டு வைத்தியர்கள் தொடர்பிலும் தகவல் பதிவு செய்துள்ளதாக இலங்கை மருத்துவ சபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.