Print this page

தனது சொந்த மகளை சித்திரவதை செய்து வீடியோ எடுத்த தந்தை கைது

தனது மகளை சித்திரவதை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் பாட்டி சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (18) மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 வயதும் 11 மாத வயதுடைய சிறுமியொருவர் தந்தையினால் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்ச்சியான வாக்குவாதங்கள் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் சிறுமியை அவரது பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமியை சித்திரவதை செய்து அதனை பதிவு செய்து மனைவிக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று (19) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.