Print this page

இலங்கை பெண் ஊடாக டுபாயில் நடந்த குழந்தை வியாபாரம்

சுமார் 12,000 திர்ஹமிற்கு குழந்தையை விற்க முயற்சித்த இலங்கை பெண் உள்ளிட்ட மூவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 35 வயதான இந்தோனேஷிய பெண் ஒருவர் பணத் தேவை இருப்பதாகக் கூறி, தனக்கு பிறந்த ஆண் குழந்தையை விற்க முயற்சித்துள்ளார். குழந்தையை விற்கும் நடவடிக்கையில் இலங்கை பெண்ணும் மேலும் இருவரும் உதவி செய்துள்ளனர்.

45 வயதான குறித்த இலங்கை பெண் 02 மாதங்களேயான குழந்தையை விற்பதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஒன்லைன் ஊடாக அறிவித்தல் வௌியிட்டுள்ளார்.

டுபாய் பொலிஸார் இது தொடர்பிலான தகவல்கள் கிடைத்தவுடன், சந்தேக நபர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த குழந்தையை வாங்குபவர் போல் நடித்து சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மூவர் மீதும் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மூவருக்கும் தலா 03 வருடங்கள் சிறைத்தண்டனையும் 4000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு மாத சிறைத்தண்டனையும் 1000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.