Print this page

அமைச்சர்கள் சிலர் பதவி விலகி புதிய பாதையில் அரசியல் பயணம் செய்ய முடிவு

November 09, 2022

அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் எதிர்வரும் காலங்களில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர்களும் புதிய அரசியல் பிரசாரத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் காலங்களில் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இவரைத் தவிர மேலும் மூன்று கேபினட் அமைச்சர்களும் இந்த அரசியல் இயக்கத்தில் இணையவுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் ஆகியோரால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் நியாயமான சமூகத்திற்கான தேசிய பிரச்சாரத்துடன் இணைந்து இந்த அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் தமது தேசிய பிரச்சாரம் தொடர்பாக அண்மையில் உரை நிகழ்த்தியிருந்தனர்.

ஆரம்பிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் இயக்கம் அரசியல் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்ட தேசிய கொள்கையுடன் உருவாக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக சிவில் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பங்கேற்பாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது.