Print this page

அநுராதபுரத்தில் பொலிஸார் மீது தாக்குதல்

November 17, 2022

அனுராதபுரம் – புபுதுபுர பிரதேசத்தில் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 06 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்ட போதே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புபுதுபுர பிரதேசத்தில் நேற்று(16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 14 கிராம் 220 கிராம் ஹெரோயினுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். புபுதுபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட போது, 06 பெண்கள் பொலிஸாரை கற்களால் தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது தப்பிச்சென்றுள்ள சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்கள் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 06 பெண்களையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(17) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.