Print this page

அரச நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

November 28, 2022

அரச நிறுவனங்களின் திறப்பு விழாக்கள், பதவியேற்பு மற்றும் ஓய்வு பெறுதல் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் பணத்தை செலவழிப்பதை நிறுத்தும் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அமைச்சின் செயலாளர் இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்த போதிலும், கோரிக்கையை புறக்கணித்து சில நிறுவனங்கள் தொடர்ந்தும் இவ்வாறான வைபவங்களை நடத்துவது தெரியவந்ததை அடுத்து அவர் இந்த புதிய சுற்றறிக்கையை வெளியிட்டார்.

பொதுச் செலவினங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில், நிதியமைச்சகச் செயலர் ஏப்ரல் 26ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு, பொது நிறுவனங்களின் விழாக்கள், திறப்புகள், மாநாடுகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற மற்றும் முன்னுரிமையற்ற செலவினங்களை நிறுத்தி, பொதுப் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார். 

மேலும், இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுமாறு ஜனாதிபதி செயலாளருக்கு ஆகஸ்ட் 15ஆம் திகதி சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது.