Print this page

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

September 04, 2020

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் வன்’ வீரர் நோவக் ஜோகோவிச் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 44-ம் நிலை வீரரான கைல் எட்மன்டை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.

முதல் செட்டை டைபிரேக்கரில் கோட்டை விட்ட ஜோகோவிச் அதன் பின்னர் தனது ஆட்ட வேகத்தை அதிகரித்ததுடன் அடுத்த 3 செட்களையும் சொந்தமாக்கி தனது ஆதிக்கத்தை நிரூபித்தார்.

3 மணி 13 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்டை துரத்தியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்றில் ஜோகோவிச், 29-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை சந்திக்கிறார்.

Last modified on Saturday, 05 September 2020 00:33