web log free
May 02, 2024

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவுள்ளார்

மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் தொடராக  விவாகரத்தை அறிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் இமான், நாகசைதன்யா – சமந்தா, ஆகியோர் அண்மையில்  விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் இன்று தனுஷும் தனது மனைவியை பிரியப் போவதாக அறிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குணர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யா பல படங்களை இயக்கி வருகிறார். கோலிவுட், பொலிவுட், ஹொலிவூட் என பல படங்களில் நடித்து வரும் தனுஷ், அண்மையில்  கர்ணன் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

ரஜினிகாந்  வீட்டிற்கு அருகே போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை தனுஷ் தற்போது  கட்டி வருகிறார். விரைவில் இந்த வீட்டிற்கு கிரஹபிரவேசம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்  யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவியை பிரிய உள்ளதாக  தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே தகவலை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”18 ஆண்டுகளாக நண்பர்கள், தம்பதி, பெற்றோர், நலம் விரும்பிகளாக இருவரும் இருந்தோம். இந்த பயணம் விட்டுக்கொடுத்தல், புரிதல், ஏற்றுக்கொள்ளல் என வளர்ந்தது.

இன்று இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். ஐஸ்வர்யாவும் நானும் தம்பதிகளாக இருப்பதில் இருந்து பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்களின் முடிவை மதித்து, எங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் முதல் திருமணமும் தோல்வி அடைந்தது. இதே போன்ற பிரச்சனைகளை அவரும் சந்தித்தார். முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற செளந்தர்யாவிற்கு சமீபத்தில் வசீகரனுடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.