இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றி, அதன்மூலம் பெருமளவு வருவாய் ஈட்டும் நோக்கில் அரசாங்கம் மாபெரும் அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டம், திருகோணமலை எண்ணெய் கிடங்கு வளாகத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது.
புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து நிர்வகித்து வரும் 81 எண்ணெய் தொட்டிகளில் 29 தொட்டிகளை நவீனமயமாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தொட்டிகளின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இன்னும் மூன்று தொட்டிகளை புனரமைப்பதற்காக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
துறைமுகத்திற்கு பெரிய கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் எண்ணெயை இந்த எண்ணெய் தொட்டிகளுக்கு மாற்றுவதற்காக புதிய குழாய் அமைப்பொன்றை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான போயாவிலிருந்து இந்த குழாய் அமைப்பை அமைப்பதற்காக பிரைமா நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகளின் ஒப்புதலும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் திருகோணமலை பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.




