Home Blog

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு, ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதில் அந்த அதிகாரியின் நடவடிக்கையால்தான் வன்முறை நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், மிகப்பெரிய பேரழிவும் தடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த அதிகாரியின் செயலால் நாங்கள் மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டோம். நாங்கள் ஒரே அணியாக இந்த சீருடையை அணிகிறோம். அவரைப் பற்றி ஏன் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன?” என்று அமைச்சரிடம் கூறினர்.

மேலும், அந்த கலவரத்தின் போது கைதிகள் சிறையிலிருந்து தப்பியிருந்தால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும்.

அந்த அதிகாரியை “வீரர்” எனக் குறிப்பிட்டதுடன் அவர் மீது சுமத்தப்படும் நியாயமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அவரைப் பாதுகாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, நீதியான முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதேவேளை இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

மாவீரன் 2 வருகிறது

‘மண்டேலா’ படத்தின் மூலம் தேசிய விருதை வென்று, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின். 

இதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ‘மாவீரன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 

ஒரு சாதாரண கார்ட்டூனிஸ்ட், விபத்திற்குப் பின் தனக்கு மட்டும் கேட்கும் ஒரு ‘அசரீரி’ குரலால் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறான் என்ற வித்தியாசமான கற்பனை மற்றும் சமூகக் கருத்துக்களோடு வெளியான இப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சரிதா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

குறிப்பாக, படத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த ‘அசரீரி’ குரலுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்திருந்தது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. 

படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ‘மாவீரன்-2’ படத்தின் கதையை மடோன் அஸ்வின் எழுதத் தொடங்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், ‘மாவீரன்-2’ படத்தின் படப்பிடிப்பு 2028 ஆம் ஆண்டு தொடங்கும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. ‘மாவீரன்-2’ படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால் ‘மாவீரன்-2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயை குற்றவாளியாக கருத முடியாது – மனு தள்ளுபடி

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

முதலமைச்சர் விஜய், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரசாரம் செய்தார். 

கரூருக்கு கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி விஜய் சென்றார். அங்குள்ள வேலுசாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

பாதுகாப்பு காரணமாக விஜய் நேரில் சென்று ஆறுதல் கூற இயலவில்லை. இருந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து தலா 20 லட்சம் ரூபா த.வெ.க. சார்பில் வழங்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு. வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. 

மேலும், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து கரூரில் சம்பவம் நடந்த இடம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரித்தனர். 

மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜரானார். அதன்பின்னரும் சி.பி.ஐ. விசாரணை தொடருகிறது. 

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இந்தநிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக உள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10 ஆம் திகதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்துள்ளது. 

இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை சுப்ரீம் கோர்ட்டு வகுக்க வேண்டும். 

அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆமானுல்லா கான், ஷீல் நாகு அடங்கிய அமர்வு முன்பு மூத்த வக்கீல் ஹுஸேபா அகமதி ஆஜராகி, கரூரில் தமிழக அரசின் சார்பில் வருகிற 10 ஆம் திகதி திட்டமிடப்பட்டு உள்ள நிகழ்வை குறிப்பிட்டு, சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். 

இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரிப்பதாக தெரிவித்தது. 

இந்நிலையில், நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமார் மற்றும் ஆசிஃபா அகமதி ஆகியோர் திமுக தரப்பில் ஆஜராகினர். 

அப்போது திமுக தரப்பில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி அவதூறு என்பது பரப்பப்பட்டு வருகிறது. வெவ்வேறு கருத்துகளை பரப்பி வருபவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 

கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் மக்களிடையே ஒரு கருத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

நீதிபதிகள், திமுக அரசு பதிவு செய்த எஃப்ஐஆரில் கூட விஜய் பெயர் இல்லை. ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள். 

ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே? பொது வெளியில் பேசியதற்கு எல்லாம் சிபிஐ விசாரணை கேட்பீர்களா? 

முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க விரும்புகிறீர்களா? 

கரூர் வழக்கில் முதலமைச்சர் விஜய் குற்றவாளி என்று கூறுவதை ஏற்க முடியாது. முதலமைச்சருக்கு நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதா? 

இந்த வழக்கை இப்போதே தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என திமுக தரப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். 

நீதிபதிகளின் கண்டனத்தை அடுத்து மனுவை திரும்ப பெறுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

போர்த்துக்கல் அணி வெளியேற்றம், ரொனால்டோவுக்கு வாழ்த்து

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ‘சுற்று 16’ஆட்டத்தில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து போர்த்துக்கல் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இப்போட்டியுடன் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கிண்ண பயணமும் நிறைவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ரொனால்டோவுக்காக தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“ஒரு போட்டி ஒரு வீரரின் மகத்துவத்தை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. மில்லியன் கணக்கான மக்கள் கனவு காண்பதற்கு நீங்கள் கற்றுக்கொடுத்துள்ளீர்கள். நீங்கள் வெறும் ஒரு வீரர் மட்டுமல்ல, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையின் அடையாளம்” என்று சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

போர்த்துக்கல் அணியின் ஏமாற்றமளிக்கும் தோல்விக்கு மத்தியிலும், ரொனால்டோவுக்கு ஆதரவாக நின்ற சிராஜின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை!

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் – ஜூலை 15 அன்று கொழும்பில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியான “Read with Ranil” (ரணிலுடன் வாசிப்போம்), ஜூலை 15ஆம் திகதி கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

தேசிய இளைஞர் முன்னணியின் (National Youth Front) ஸ்மார்ட் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) பிரிவு ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்ச்சியின் முதல் கட்டம் “புதிய உலக ஒழுங்கு: புவிசார் அரசியல், பொருளாதார மாற்றங்கள் மற்றும் இலங்கையின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மற்றும் அவை இலங்கையின் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து இளைஞர்கள் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் அரசின் தோல்வியின் வெளிப்பாடு!

– நிர்மால் ரஞ்சித் தேவசிறி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்த சம்பவம், தற்போதைய அரசின் வெளிப்படையான தோல்வியையும், அரசு எதிர்கொள்ளும் மிகக் கடுமையான சவாலையும் பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர் டாக்டர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஜன பலய அமைப்பின் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலை அமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டால், இவ்வாறான ஒரு சம்பவம் எந்த நேரத்திலும் நடைபெறக்கூடியதாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த அரசுக்கு சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பாக தெளிவான திட்டமோ அணுகுமுறையோ இருக்கவில்லை. சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அறிவிருந்தபோதிலும், அதனை முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டியிருந்தது. ஆனால், இந்த நிலைமையை முன்கூட்டியே உணர்ந்து தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களையும் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், சிறைச்சாலை மறுசீரமைப்பு இல்லாமல் அந்த முயற்சிகள் வெற்றி பெற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது கைதிகளின் பிரச்சினை மட்டுமல்ல; முழு நிர்வாக அமைப்பின் சீர்கேட்டைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை நாட்டின் கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளுடனும் தொடர்புடையது என்றும் அவர் கூறினார். பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் இளைஞர்கள் குற்ற உலகிற்கும் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் தள்ளப்படுவதைத் தடுக்க அரசு தவறிவிட்டதாகவும், சிறைச்சாலை நெருக்கடிக்கு தீர்வு காணும்போது இந்த சமூகக் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சம்பவத்திற்கான பொறுப்பை நீதி அமைச்சர் ஏற்றுக்கொள்வதாக கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது என்றும், அரசிடம் தெளிவான மறுசீரமைப்பு செயற்திட்டம் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தங்கள் போன்ற விடயங்களை தற்காலிக அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்துவதற்குப் பதிலாக, இவ்வாறான தீவிரமான சமூகப் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி வலியுறுத்தினார்.