ரூ.24 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உணவுக் கட்டணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான நிஷாந்த சமரவீர மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர ஆகியோருக்கு இடையில் சூடான விவாதம் இடம்பெற்றுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நிஷாந்த சமரவீர, குறித்த உணவுக் கட்டணம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவுச் செலவு மட்டுமல்ல எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் முழுமையான பணியாளர் குழுவினரின் உணவுச் செலவுகளும் இதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொகை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மட்டுமே செலவிடப்படுவதாக சமூகத்தில் பரவி வரும் கருத்து தவறானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினரின் இந்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர, மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் இந்த உணவுக் கட்டணம் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அது 225 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.
அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே குற்றம் சாட்டியவர்கள், இன்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பின்னர் அதே உணவுக் கட்டணத்தை பாராளுமன்ற ஊழியர்களின் செலவுக் கணக்கிலும் சேர்த்து நியாயப்படுத்த முயற்சிப்பது ஆச்சரியமளிப்பதாக அவர் கூறினார்.




