பாடசாலை மாணவிகள் இருவருடன் நல்லத்தண்ணி நகரிலுள்ள தங்குமிட விடுத்தியில் தங்கியிருந்த தனியார் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய ஜே.ட்ரொஸ்கி முன்னிலையில், சனிக்கிழமை (04) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்த நீதவான், பெப்ரவரி மாதம் 12ஆம் திகதியன்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
கண்டி வத்தேகம- கண்டி வீதியில் வசிப்பிடமாகக் கொண்ட 45 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் ஆங்கிலம் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர், பன்விலவைச் சேர்ந்த இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் இரண்டு மாணவிகளுடன், சிவனொளி பாதமலையை பார்வையிடுவதற்காக, கடந்த 3ஆம் திகதி சென்றுள்ளார்.
நல்லத்தண்ணியிலிருந்து ககுலதென்ன வரைக்கும் நடந்துசென்றுள்ளார். அதற்கு மேல் செல்லமுடியாது என்பதனால், இரண்டு மாணவிகளை அழைத்துகொண்டு நல்லத்தண்ணி நகரிலுள்ள தங்குவிடுதிக்கு சென்றுள்ளார்.
அவ்விரு மாணவிகளும் ஆசிரியரை தந்தையென கூறியுள்ளார். அவரும் இவ்விருவரும் தன்னுடைய மகள்மார் என, அந்த விடுதியின் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், ஒருநாளுக்கு மட்டும் அரையொன்றை வாடகைக்கு எடுத்து, தங்குவதற்குச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், மாணவிகள் இருவரையும் தங்களுடைய பொறுப்பின் கீழ் கொண்டுவந்ததுடன், அவரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் போதே, அவர் ஒரு ஆசிரியர் என்பதும், வத்தேகமையைச் சேர்ந்தவர் என்றும், தெரியவந்துள்ளது.
மாணவிகள் இருவரும், கிளங்கன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
வத்தேகமையைச் சேர்ந்த அவ்விரு மாணவிகளும், குறித்த ஆசிரியருடன் இதற்கு முன்ர் சிகிரியவுக்கு சென்றுள்ளனர். அந்த ஆசிரியர், கிறிஸ்தவ மதம் தொடர்பிலான போதனைகளை மேற்கொள்ளும் பாதிரியார் என்றும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது,
நல்லத்தண்ணியிலுள்ள வர்த்த நிலையத்துக்கு அவ்விரு பெண்களில் ஒருவரை அழைத்துச் சென்றிருந்த சந்தேகநபர், பெண்களுக்கான உள்ளாடைகள் சிலவற்றையும் கொள்வனவு செய்துள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவிகள் இருவருடன் அன்றிரவு 11 மணிக்கு அறைக்குள் சென்ற ஆசிரியரும் மாணவிகளும் 11.15க்கு பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரபட்டனர்.
அந்த மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் தொடர்பிலான அறிக்கை, வைத்தியசாலையில் வைத்திய அதிகாரினால், ஹட்டன் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது என்றும் அறியமுடிகின்றது.