குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 14 பேரில் 13 பேர் இறந்து விட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 ராணுவ அதிகாரிகளின் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ``இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாக, பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உட்பட நமது ஆயுதப் படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் பணியாற்றினார் ஜெனரல் ராவத். அவரின் சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது. ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்காற்றினார். அவரின் மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது" என்றுக் குறிப்பிட்டிருக்கிறார்.



