web log free
March 08, 2026

ஜனாதிபதி ரணில் குறித்து ராதா வெளியிட்டுள்ள தகவல்

"இன்று எல்லா அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. அவர் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டுவருகின்றார். அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொட்டகலையில் இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் இன்று வரிசை யுகம் முடிந்துவிட்டது எனவும், இயல்பு நிலை திரும்பிவிட்டது எனவும் சிலர் கூறுகின்றனர். உண்மை அதுவல்ல, பொருட்களின் விலைகள் எகிறிவிட்டன. மக்களின் கொள்வனவு சக்தி குறைந்துவிட்டது. அதேபோல எரிபொருள் உள்ளிட்டவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் வழங்கப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டக்கல்லூரிக்கு சென்றிருந்தவேளை, அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக ஏற்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் தெரிவாகி இருந்தாலும், மக்கள் ஆணை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

என்னதான் அதிகாரம் இருந்தாலும் தர்மத்தின் பக்கம் நிற்பதே சரியான தீர்மானம். ஆனால் ஜனாதிபதி ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டு மக்களை ஒடுக்க முற்படுகின்றார்." என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd