web log free
October 18, 2024

ஜப்பான் வாகன விபத்தில் இலங்கை இளைஞர்கள் பலி

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மாத்தறையை சேர்ந்த 26 வயதான நிசல் சாருக்க விதானகே மற்றும் 27 வயதான ரஜித்த லக்மால் சந்தருவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான் - இபரகியில் கடந்த 12 ஆம் திகதி இரவு 11.50 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் 32 வயதான ஒருவர் ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து இடம்பெற்ற போது அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற போது இரண்டு வேன்களில் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட 07 பேர் இருந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உயிரிழந்த நிசல் சாருக்க விதானகே வேனை ஓட்டியுள்ளதுடன், விபத்து இடம்பெற்று மூன்று தினங்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

ரஜித்த லக்மால் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கையை சேர்ந்த மேலும் இரண்டு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.