web log free
February 08, 2026

பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவைகள் சில ரத்து

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகேவிடம் வினவிய போது, நேர அட்டவணையின் பிரகாரம் இன்று(10) ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என கூறினார்.

எனினும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று(10) காலை 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மார்க்கத்தில் ஒரு ரயில் சேவையும் களனிவௌி மார்க்கத்தின் 02 ரயில் சேவைகளும் குருணாகல் மற்றும் மொறட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு - பதுளை இடையிலான உடரட்ட மெனிக்கே ரயில் சேவையையும் இன்று(10) இரத்து செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd