web log free
May 09, 2025

முதற்கட்ட பிரேத பரிசோதனை நிறைவு

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார்.

சடலம் தொடர்பான மேலதிக பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை குறித்த முழுமையான அறிக்கையை வெளியிடுவதற்கு இன்னும் 2 மாதங்கள் செல்லும் எனவும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கூறினார்.

முதற்கட்ட பரிசோதனை அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்தார்.

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உயிரிழப்பு தொடர்பில் தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட சட்ட மருத்துவ அதிகாரிகளால், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஷாப்டரின் சடலம் கடந்த 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.

பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் ஷாப்டர் அன்றைய தினம் இரவு உயிரிழந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd