web log free
July 01, 2025

மைத்திரியின் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு

கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, கட்சியின் பழைய யாப்பிற்கு அமைய செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இதுவரை வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவிற்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பழைய யாப்பு செயற்படுத்தப்படும்போது, கடந்த வருடம் செப்டம்பர் 22 ஆம் திகதி திருத்தியமைக்கப்பட்ட கட்சியின் யாப்பு மற்றும் அதிகாரிகள் குழு ஆகியன இரத்து செய்யப்படும். 

இதற்கமைய, சுதந்திரக் கட்சியின் புதிய யாப்பிற்கமைவாக தற்போது சிரேஷ்ட உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பதவிகள் இரத்தாகவுள்ளன. 

அத்துடன், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள சாரதி துஷ்ருமந்தவின் பதவியும் இரத்தாகவுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய யாப்பிற்கமைய, சிரேஷ்ட உப தலைவர்களாக செயற்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும், கட்சியின் பொருளாளராக செயற்பட்ட லசந்த அழகியவண்ணவும் தொடர்ந்தும் அந்த பதவிகளில் செயற்படவுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd