அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவரின் சகோதரியின் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 3 நாட்களாக வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர், வீட்டில் இருந்த நகைகள், வைரங்கள், இரத்தினக்கல் மோதிரங்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையிட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபா என தெரியவந்துள்ளது.
அதிகாலை 1.00 மணிக்கும் 4.00 மணிக்கும் இடையில் பிரதேசவாசிகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தகொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், கொள்ளையிடப்பட்ட பொருட்களையும், சந்தேக நபரின் மனைவி மற்றும் மகளையும் பேலியகொடை ஒலியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நாளை (08) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


