web log free
March 09, 2026

ஜோன்ஸ்டனின் பாராளுமன்ற உரையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்த மரணம் வாகன விபத்தா அல்லது கொலையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என சுட்டிக்காட்டினார்.

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவியாலும் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும், விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் துரித விசாரணைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இது கொலை என நிரூபிக்கப்பட்டால், அந்த மரணத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd