web log free
April 22, 2025

இலங்கை - இந்திய கப்பல் சேவை தற்காலிகமாக இரத்து

நாகப்பட்டினம், இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து நாளை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பயணத்திட்டம் தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தார்.

செரியாபாணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக போக்குவரத்து சேவை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தினை Indsri ferry private limited என்ற தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. கடந்த 13ம் திகதி கப்பல் சேவை தொடங்கும் என அந்த தனியார் நிறுவனம் அறிவித்தது.

சிவகங்கை என்ற கப்பல் அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்டு சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சில சட்டரீதியான அனுமதிகள் கிடைக்காத காரணத்தால் 13ம் திகதி துவங்க இருந்த கப்பல் போக்குவரத்து சேவை, 19ம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்திய எல்லைக்குள் இயக்கும் அனுமதி மட்டுமே பெற்றிருந்த சிவகங்கை கப்பலுக்கு, வணிகக் கடல் துறையின் சர்வதேச பதிவு எண் கிடைக்காத காரணத்தால் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை (19ம் திகதி) நாகப்பட்டினம் - காங்கேசன் துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

’தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதி மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக திட்டமிட்ட கப்பல் போக்குவரத்தை தொடங்க முடியவில்லை. கப்பல் இயக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும். முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களது பயணத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து சேவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால், டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd