தற்போது வழங்கப்பட்டுவரும் 7,50,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டு புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படுமானால் இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவோருக்கும் சிக்கல் ஏற்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடமிருந்து அதிகளவான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயமாகும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்; பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை தேடும் இலங்கையர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி கடவுச்சீட்டு கிடைப்பதை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தலையீட்டை கோரியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெறுவதில் தொடர்ந்தும் தவறினால், இந்நாட்டில் கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வேறு நாடுகளின் தொழில் சந்தைக்கு திருப்பி விடப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடலை நடத்திய போதிலும், இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆண்டின் முதல் பாதிக்கு மட்டுமே போதிய கையிருப்பு இருப்பதாகவும், புதிய கடவுச்சீட்டு நகல்களைப் பெறுவதற்கு விலை மனு கோருவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லாமல் இருப்பதும் கடவுச்சீட்டு நெருக்கடி மேலும் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.