web log free
December 21, 2025

உள்ளாட்சி தேர்தல் சட்ட சட்டத்துக்கு நீதிமன்றம் பச்சை கொடி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றில் இன்று (14) அறிவித்தார். 

இது தொடர்பில் பாராளுமன்றம் விடுத்துள்ள விசேட அறிக்கை பின்வருமாறு, 

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு 3 நீதிபதிகள் கொண்ட குழாத்தினால் விசாரிக்கப்பட்ட 'உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)' எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன். 

அதன் பிரகாரம் நீதிபதிகள் குழாத்தின் பெரும்பான்மையினராகிய நீதிபதிகள் இருவர் பின்வருமாறு தீர்ப்பளித்துள்ளனர், 

சட்டமூலம் முழுமையாகவும் மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும். 

நீதிபதிகள் குழாத்தின் மீதமுள்ள நீதிபதி அவர்கள் பின்வருமாறு தீர்ப்பளித்துள்ளார், 

சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லை என்பதால் அதனைப் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை ஒன்றின் மூலம் நிறைவேற்றப்பட முடியும். 

உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd