web log free
September 15, 2025

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை இரத்து

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார். 

அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை பொருந்தாததால் மற்றும் அது உரிய முறையில் இல்லாதததாலும் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் குறிப்பிட்டார். 

இதன்போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நிலையியல் கட்டளைகளின் கீழ், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் மற்றும் செயலகத்தின் அறிக்கையை சபைப்படுத்துமாறு கோரினார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சபாநாயகரின் முடிவு குறித்து தனது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு கோரினார், ஆனால் இது ஒரு விவாதம் அல்ல என்றும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சபாநாயகர் கூறினார். 

இதனையடுத்து பாராளுமன்றத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், குறித்த அறிவிப்பை கவனமாகப் படிக்குமாறு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறினார். 

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd