இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியராக இருக்கு நாகமுத்து பிரதாபராஜா, நாட்டில் வெப்பநிலை செல்சியஸ் 43 டிகிரியைத் தாண்டக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அவரது விளக்கத்தின்படி, ஏப்ரல் 2 முதல் 15 வரை சூரியன் இலங்கைக்கு நேர்முகமாக மேலே நிலை கொள்ளும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில், சூரிய கதிர்கள் நேரடியாக விழுவதால், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
இதன் காரணமாக, தினசரி சராசரி வெப்பநிலை 38°C முதல் 42°C வரை இருக்கும் நிலையில், பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 43°C ஐ மீறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, மனித உடல் 40°C ஐ விட அதிகமான வெப்பநிலையை தாங்க முடியாது. அந்த அளவைத் தாண்டும் போது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) எனப்படும் தாப அதிர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த கடும் வெப்பநிலை காரணமாக,
- முதியவர்கள்
- குழந்தைகள்
- சிறப்பு தேவைகள் உள்ளவர்கள்
- உடலில் நீர் குறைபாடு (dehydration) ஏற்படக்கூடியவர்கள்
மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் குடிப்பது, நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருக்காமல் தவிர்ப்பது, மற்றும் உடல் நலத்தை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




