நிதி அமைச்சின் இணையதளத்தில் ஹேக்கர்கள் நுழைந்து மோசடி நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்தை முன்னிட்டு, தங்களது அரசாங்கத்தை முந்தைய அரசுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடுவது நியாயமல்ல என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கி மோசடி விவகாரத்தில் விதிமுறைகளை மாற்றி நேரடியாக உத்தரவுகள் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், தற்போதைய அரசு அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிக்கு அவர் சவால் விடுத்தார்.
மேலும், எதிர்க்கட்சி தவறான குற்றச்சாட்டுகள் மூலம் அரசாங்கத்தை களங்கப்படுத்த முயற்சித்தாலும் அது வெற்றியடையாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
நிலக்கரி மோசடி மற்றும் அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் அளவிலான நிதி மோசடி குறித்தும் விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்காக எதிர்க்கட்சியினரிடம் உள்ள தகவல்களையும் வழங்கலாம் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




