web log free
May 07, 2026

ராஜபக்ச குடும்பத்தின் 40 கோடி சொகுசு மாளிகை தொடர்பில் விசாரணை

கொழும்பு, டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள, 40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொகுசு மாளிகை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது பாரிய விசாரணையை ஆரம்பித்துள்ளது.

கடந்த காலங்களில் யோசித ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி சேவையின் உத்தியோகபூர்வ தலைமையகமாகவும் இயங்கி வந்த இடம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரி லூட்ஸ் விக்ரமசிங்க என்ற பெயரிலேயே ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அது முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவின் பிறப்புச் சான்றிதழில் உள்ள உண்மையான பெயராகும் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்சவுக்காக, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த வீடு, மஹிந்த ஜனாதிபதியான பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் முழுமையான சொந்தமாக மாறியுள்ளது.

எனினும், 40 கோடி மதிப்புள்ள இந்த காணி வெறும் 3.5 கோடி ரூபாய் என்ற மிகக் குறைந்த மதிப்பில் கொள்வனவு செய்யப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு பெற்றார் என்று லஞ்ச ஊழல் ஆணைக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு ஷிரந்தியிடம் இதுவரை முறையான விளக்கம் கிடைக்கவில்லை.

இந்தச் சொத்துக்கான உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தவரும், தனது முன்னிலையில் எவ்வித பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவின் மகன், தொழிலதிபர் பிரபாத் நாணயக்காரவிடம் பணம் கொடுத்து இதனை வாங்கிப் பின்னர் தன்னிடம் ஒப்படைத்ததாக ஷிரந்தி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd