அரசாங்கத்திற்கான வாகன கொள்முதலை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு நாணய மேலாண்மை குறித்து கருத்து வெளியிட்ட அவர், அரச செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
குறிப்பாக, மே மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிக்காக மட்டும் அரசாங்கம் அமெரிக்க டொலர் 550 மில்லியன் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக எரிபொருள் பயன்பாட்டை ஒரு அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருளுக்காக ஏற்படும் இந்த அதிக செலவினை முன்னிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை நிலைத்தன்மையுடன் பேணுவதற்காக தேவையற்ற செலவுகளை குறைப்பது அவசியமானது என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் அரசாங்கத்திற்கான வாகன கொள்முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.




