அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் பிரதம சங்கநாயகர் பல்லேகம ஹேமரதன தேரர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கைத் தொடர்ந்து எழுந்துள்ள கடும் பொதுமக்கள் எதிர்ப்பை முன்னிட்டு தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
71 வயதுடைய ஹேமரதன தேரர், 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இம்மாதம் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் சிறுமியின் தாயாரும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இரு சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கியது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் பொதுமக்கள் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற விசாரணைகள் நிறைவடையும் வரை, ருவன்வெலிசாய மகா சேயாவின் பிரதம சங்கநாயகர் ஈத்தலவெடுனாவெவ ஞானதிலக தேரர், அட்டமஸ்தானத்தின் நிர்வாகப் பொறுப்புகளையும் கடமைகளையும் தற்காலிகமாக மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


