இவ்வாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை முதல் நான்கு மாதங்களில், இலங்கையின் துணிநூல் மற்றும் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.3 சதவீதம் குறைந்து 1,624.7 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் ஏப்ரல் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் துணிநூல் மற்றும் ஆடை ஏற்றுமதி வருவாய் 1,751.8 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 7.3 சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில் துணிநூல் மற்றும் ஆடை ஏற்றுமதி வருவாய் 348 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அது 365.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
இதன் காரணமாக, ஏப்ரல் மாதத்திலும் துணிநூல் மற்றும் ஆடை ஏற்றுமதி வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4.7 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகள், இலங்கையின் முக்கிய ஏற்றுமதி துறைகளில் ஒன்றான ஆடைத் துறை இன்னும் சவால்களை எதிர்கொண்டு வருவதை வெளிப்படுத்துகின்றன.


