ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) ஆகிய கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்களது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், இரு தரப்பும் உடனடியாக ஒன்றிணைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய தலைமையின் கீழ் இந்த இரு கட்சிகளும் மிக விரைவில் ஒரே அரசியல் முன்னணிக்குள் இணையும் என்றும், அதன் பின்னர் மிகப் பெரிய அரசியல் சக்தியாக முன்னேற முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்குள் “பேய்களின் மகன்கள்” புகுந்துள்ளதாகவும், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மூத்த உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர்,
“இதை நான் இனி சகித்துக்கொள்ள முடியாது. செயற்குழுவில் இந்த ‘பேய்களின் மகன்கள்’ இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் இருந்து வரும் எங்களுக்கு கூட வாய்ப்பு வழங்காமல் இருப்பது அவர்கள்தான். இது என்ன நகைச்சுவை?” என்று தெரிவித்தார்.
இரு கட்சிகளும் ஒன்றிணைவது மட்டுமே எதிர்கால அரசியல் வெற்றிக்கான சரியான பாதை எனவும், அதற்கான சூழல் தற்போது உருவாகி வருவதாகவும் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.


