ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவரான நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டாவுக்கு சலுகை பெற்றுத்தருவதாகக் கூறி இலஞ்சமாக பெறப்பட்ட ரூ.1,200 இலட்சம் (ரூ.12 கோடி) பணத்தில், சரித் அபேசிங்க மற்றும் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஆடம்பர வாகனங்கள் மற்றும் சொத்துகள் வாங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் நாயகம் அனூஷா சம்பந்தப்பெரும தெரிவித்ததாவது:
“இந்தச் சம்பவம் தொடர்பாக ஹரக் கட்டாவின் மனைவி மதுஷானி பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளார். மேலும் ஹர்பி என்ற நபர் சத்தியப்பிரமாண வாக்குமூலமும் வழங்கியுள்ளார்.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள நதுன் சிந்தக (ஹரக் கட்டா) மற்றும் மிதிகம ருவன் ஆகியோரிடமிருந்தும் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். இந்தப் பணத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, மூன்றாவது சந்தேகநபரே உண்டியல் முறையில் அந்தப் பணத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் முதல் மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் ஆடம்பர வாகனங்கள் வாங்கியதும், வீடுகள் கட்டியதும் தெரியவந்துள்ளதால், அதுகுறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.”


