web log free
May 09, 2025

மொட்டுவின் வேட்பாளர் கோட்டாபயவே

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்படுவது உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓகஸ்ட் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார்.

அதன் பின்னர் அவர் அநேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த புதன் கிழமை மருத்துவசிகிச்சையின் பின்னர் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார்.

அவரை வரவேற்பதற்கான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்ய மஹிந்த ராஜபக்ஷ விரும்பினார்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கோட்டாபய ராஜபக்ஷவை களனி விகாரைக்கு பேரணியாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவை அநுராதபுரம் மகாபோதி விகாரைக்கு வாகனப்பேரணியாக அழைத்து செல்வதற்கான திட்டங்களும் காணப்படுகின்றன.அதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ கண்டிக்கும் செல்வார்.

-சண்டே டைம்ஸ்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd