web log free
February 20, 2026

பல்டி அடித்தார் மைத்திரி

ஒருமுறைதான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலிலிருந்து தான் ஓய்வு பெறமாட்டேன் என திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இதனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜனபெரமுனவுக்கும் இடையில் முக்கியமான கலந்துரையாடல் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்று (28) இடம்பெற்றது. 

இதில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

எனினும், பொலன்னறுவையில் நேற்று(28) மாலை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 

“எனது உடல் நிலை நன்றாகவே உள்ளது. ஆகையால், இந்நாட்டுக்கு இன்னும் கொஞ்சம் வேலைச் செய்யமுடியும்” என்றார். 

“இன்று கொஞ்சபேர் நினைக்கின்றனர். முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை இன்றைக்கு அல்லது நாளைக்கு நடக்குமென்று, நான் போட்டியிடப் போவதாக அறிவிக்கவில்லை. ஆகையால், இந்த மனிதர் இத்துடன் சரி என பலரும் நினைக்கின்றனர். அடுத்த டிசம்பர் மாதத்துக்குப் பின்னர், நானும் ஒரு நடவடிக்கையை எடுப்பேன்” என்றார்.

“நாட்டின் அபிவிருத்தியை போல, பொலன்னறுவை அபிவிருத்தியையும் புதுமையடையச் செய்வேன்” என்றார்

 
Last modified on Tuesday, 01 October 2019 02:33
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd