web log free
July 04, 2025

எக்னெலிகொட வழக்கில் புதிய திருப்பம்

கிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் கேர்னல் ஷம்மி அர்ஜூன குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் 9 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான, சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

2010 ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள், கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்லாத நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக, நாதங் என அழைக்கப்படும் R.M.D.K. ராஜபக்ஸ, சுரேஷ் என அழைக்கப்படும் வடுகெதர வினி பிரியந்த டிலன்ஜன் உபசேன, ரஞ்சி என அழைக்கப்படும் சமிந்த குமார அபேரத்ன, தனுஷ்க குணரத்ன, ஐயாசாமி பாலசுப்ரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் T.E.R. பீரிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவிற்கு அமைய பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க விசேட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd