பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்து ஆட்டோ டிரைவர் ஒருவர் சிக்கியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அயனாவரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவாகியுள்ளது. அந்தப் புகாரை ஒரு பெண் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் எனது இரு மகள்களுடனும், கணவருடனும் அயனாவரத்தில் வசித்து வருகிறேன். எனது மகள் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பாத்ரூம் ஜன்னல் ஓட்டை வழியாக யாரோ பார்ப்பது போல இருந்ததால் அவர் கத்தி சத்தம் போட்டார். இதையடுத்து ஓடிப் போய்ப் பார்த்தபோது வினோத் என்ற ஆட்டோ டிரைவர் தனது செல்போனை அந்த ஓட்டையிலிருந்து எடுப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நான் வேகமாக அவரிடம் விரைந்தேன். அவர் தப்ப முயன்றார். ஆனால் நான் அவரது செல்போனைப் பிடித்து பறிமுதல் செய்து விட்டேன். எனது கணவர் வந்ததும் நடந்ததைக் கூறினேன். அவர் விரைந்து சென்று வினோத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது அவர் கொன்று விடுவேன் என்று மிரட்டலாக பேசினார்.
வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் தனது புகாரில் கூறியிருந்தார். செல்போனை வாங்கிப் பார்த்த போலீஸார் அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக குளியல் அறையில் குளிக்கும் காட்சிகளும் இருந்தன. இதையடுத்து வினோத்தை கைது செய்த போலீஸார் அவர் மீது வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.