web log free
September 19, 2024

ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் திகதிக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும். ஏற்கனவே இருந்த, விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைப்படியே இந்த தேர்தல் நடைபெறும்.

வேட்புமனுக்களில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் கலந்துரையாடப்பட்டு, முடிவு எடுக்கப்படும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையிலும், தென், மேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்திலும், ஊவா மாகாண சபையின் பதவிக்காலம், ஒக்ரோபர் மாதமும் முடிவடையவுள்ள நிலையிலேயே- ஒரே நாளில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

 

Last modified on Wednesday, 11 September 2019 01:35