யாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்.
கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆராத னையில் கலந்து கொண்ட இருவர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவர்கள், மாவட்டங்களை சோ்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இருப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக அறியத்தரவும் என அவர் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
இந்த போதனை நிகழ்வை நடத்திய போதகர் திரும்பி சுவிஸ் சென்ற நிலையில் அங்கு அவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் இந்த மதபோதனையில் கலந்து கொண்டிருந்தவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறும், சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் அரியாலை பகுதியில் உள்ள மருத்தவர் ஒருவர் ஊடாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், நல்லுாா் பிரதேச மருத்துவ அதிகாரி ஜெயக்குமார், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் மோகனகுமார் மற்றும் சுகாதார பாிசோதகர், பொலிஸார் என அதிகாரிகள் குழாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.
இதன் பின்னர் முதல்கட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கின்றனர். மேலும் குறித்த நபர் அவருடைய வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
மேலும் அவருடைய குடும்பத்தாரும் கண்காணிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த மதபோதகர் பாடசாலை அடிக்கல் நாட்டு நிகழ்வொன்றுக்காக கடந்த 11ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வந்துள்ளார்.கடந்த 15ஆம் திகதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்துள்ளது.
அதில் 150 பேர் கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகிறது.அவர்களையும் அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அதேவேளை மதபோதகருடன் நெருக்கமாக பழகிய 15 பேரில் ஒருவர் வவுனியாவை சோ்ந்தவர் எனவும், அவரை அழைத்து வந்தவர் யாழ். நவாலியை சேர்ந்தவர் எனவும், மற்றையவர்கள் அரியாலை மற்றும் கோப்பாய் பகுதிகளை சேர்ந்தவா்கள் எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அதில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மிகுதி 14 பேரை தேடும் நடவடிக்கையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், மருத்துவ அதிகாரிகள் களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.