web log free
December 05, 2025

ஆய்வுகளை மேற்கொள்ள ருவாண்டா நிபுணர் குழு இலங்கை வருகை


இலங்கையில் பரவிவரும் சேனா படைப்புழு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக ருவாண்டாவின் நிபுணர் குழுவொன்று இலங்கை வந்துள்ளனர்.

இலங்கையில் சேனா படைப்புழு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, படைப்புழுவை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவே அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

கடந்த இரு வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் சேனா படைப்புழு அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேனா படைப்புழு இலங்கையில் முதன்முதலாக 2018 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் கண்டறியப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஏற்பட்டுள்ள சேனா படைப்புழு பரவலால் இலங்கையின் பல மாவட்டங்களிலும் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்பட்ட விளைச்சலும் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 6 பேர் அடங்கிய ருவாண்டா நிபுணர் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டினுள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd