web log free
December 05, 2025

மட்டக்களப்பில் நஞ்சற்ற விவசாய உணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களது "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக  சேதனை முறையில் நஞ்சற்ற விவசாய உணவு  உற்பத்திகளை  மேற்கொள்வதற்கான  வேலைத்திட்டங்கள் தேசிய ரீதியில்  விவசாய அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்  கிழக்குமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய  கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற  சேதனை முறையிலான  விவசாய நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஒதுக்கப்பட்டுள்ள  விவசாய நிலங்களில்  சேதனை முறையில்     விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பது  தொடர்பாக   ஆலோசனைகளை  பெற்றுக்கொள்வதற்கான மாவட்ட  விவசாய திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று (19) மட்டக்களப்பில் நடைபெற்றது.
 
கிழக்கு மாகாண விவசாய கால்நடை, நீர்ப்பாசன மீன்பிடி உணவு வழங்கள் மற்றும் விநியோக  அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்குமாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் கலந்துகொண்டார்.

இதன்போது சேதனை முறையில் நஞ்சற்ற  விவசாய உணவு  உற்பத்திகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக  இடம்பெற்ற கலந்துரையாடலில்  மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.உஷையின், மாவட்ட விவசாய பணிப்பாளர்  எஸ்.எம்.ஏ.கலீஸ், மாவட்ட உரச்செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜூதீன், மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரீ.பேரின்பராஜா, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் உட்பட ஆளுநரின் இணைப்பு செயலாளர் மகேஷ் சதுரங்க, கிழக்கு மாகாண  சுற்றுலாத்துறை தலைவர்  ரீ.ஹரி பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd