web log free
February 02, 2026

அமைச்சர் டக்ளஸ் குறித்து சுமந்திரன் கேலிப் பேச்சு

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவே என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

அவர் பாவம் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை அவரால் பொறுக்க முடியாமல் அவர் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஏன் போராடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

மக்களுடைய பிரதிநிதிகளாக நாங்கள் மக்களுடன் சேர்ந்துதான் போராடினோமே தவிர நாங்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கவில்லை. இது முற்றுமுழுதாக மக்களுடைய போராட்டங்களாக நடந்தது.

நாங்கள் மக்களுடன் கூட நின்றோம். தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் இவர். அவர் இன்றைக்கு இப்படி சொல்லுவார், நாளை வேறொன்றை சொல்லுவார், அவற்றை எல்லாம் முக்கிய விடயமாக எடுத்து கொள்ள கூடாது என தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd