web log free
April 24, 2024

தேசத்தைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தையே ரணில் உருவாக்குவார்

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைக்கமாட்டார் எனவும் , தேசத்தைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

“அனைத்து கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் என நம்புகிறோம். இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் அந்நிய கையிருப்பு வரலாற்றில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றுள்ளது, அதேவேளையில் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மக்கள் தவிக்கின்றனர். இந்த நெருக்கடியைத் தீர்த்து, மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியது இன்றியமையாதது” என்று ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ராஜபக்சக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் குறித்து சில வெளிநாடுகளும் நன்கொடை நிறுவனங்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளதால் அவர்கள் இலங்கைக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .