web log free
May 02, 2025

5ஆம் 6ஆம் திகதிகளில் நாட்டில் குண்டு வெடிக்கும் என எச்சரிக்கை!

ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் இருந்து வடக்கு, கிழக்கு அல்லது தென்னிலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரித்து, பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, குறித்த கடிதத்தின் பிரகாரம் சர்வதேச உளவு நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்படி இரண்டு தினங்களில் இடம்பெறவுள்ள கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை இலக்கு வைத்து இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டாம் என வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இந்த ஆவணம் எச்சரிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தின் சில பகுதிகளை அநுர திஸாநாயக்க வாசித்தார். 

இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அப்படித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையும் உணர்வுகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுவதாகவும் சந்தேகம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd