web log free
September 15, 2025

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் - செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் உதவிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd